1
உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
2
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
3
(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை யெ; து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.
4
இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
5
இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன."
6
(நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக!
7
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; "இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?"
8
அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை" என்றும் கூறுகிறார்கள்.
9
(நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.
10
(நபியே!) இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
11
எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர் ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
12
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
13
மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
14
இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள் (என்று அவர்களிடம் கூறப்படும்).
15
அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்" என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும்.
16
அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.
17
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) "என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?" என்று (இறைவன்) கேட்பான்.
18
(அதற்கு) அவர்கள் "இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறுவர்.
19
நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்" (என்று இறைவன் கூறுவான்).
20
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும்தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
21
மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்; "எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?" என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
22
அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
23
இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
24
அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும், சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
25
இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.
26
அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுகு; கு கடுமையான நாளாகவும் இருக்கும்.
27
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான்.
28
எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?
29
நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்! (என்று புலம்புவான்.)
30
என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார்.
Sonraki 30 ayet →